அரிசிக்கு கட்டுபாட்டு விலை
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் அரிசிக்கு காணப்படும் பலதரப்பட்ட விலைகளால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நடைமுறைக்கு வருவதாக நுகர்வோர் அதிகார சபையின் யாழ்மாவட்ட அதிகாரியான ந.சிவசீலன் ஒன்லைன் உதயனுக்கு நேற்று தெரிவித்தார்.
18.03.2009 தொடக்கம் அரிசிக்கான கட்டுப்பட்டு விலைகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கமைய சம்பா-70ரூபா, வெள்ளைப் பச்சை-60 ரூபா, நாட்டரிசி-60 ரூபா என நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த ஆண்டு புரட்டாதி, ஐப்பாசி மாதங்களில் கட்டுப்பாட்டு விலைகள் தளர்த்தப்பட்டிருந்தன.
இவ்வாறு தளர்த்தப்பட்டமையால் பல்வேறு பிரதேசங்களில் பலதரப்பட்ட விலைகளில் அரிசி விற்பனை செய்யப்பட்டது. இது பாவணையாளர்களிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியமையால் மீண்டும் கட்டுப்பாட்டு விலை நடைமுறைக்கு வருகின்றது.
இதன்படி சம்பா-70ரூபா, வெள்ளைப் பச்சை-55 ரூபா, நாட்டரிசி-60 ரூபா என கட்டுப்பாட்டு விலைகள் மீண்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்காட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாது, இவ்விலைகளை மக்கள் பார்வைக்கும் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களிற்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நுகர்வோர் அதிகார சபையினால் திடீர் பரிசோதணைகள் மேற்கொண்டு சட்த்தை மீறும் வர்த்தகர்கள் இனங்கானப்படுவார். இவர்களிற்கு எதிராக நீதிமண்ற நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுப்பாட்டு விலைச் சட்டங்களை மீறுவோர் 1000- 10,000 ரூபா வரையில் தண்டப்பணம் செலுத்தும் நிலையேற்படும் எனவும் ந.சிவசீலன் கூறினார்.
இதேவேளை நுகர்வோரைப் பாதுகாக்கும் கட்டுப்பாட்டு விலை என்பது மிகைக்கேள்வியை தோற்றுவிக்கும். இது கறுப்புச்சந்தை விலையினை உருவாக்கும். இதனை தவிர்க்க இறக்குமதி செய்து கட்டுப்பாட்டு விலையில் அரிசியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய பொருளாதார பாதிப்பு தொடர்பாக நாளை கொழும்பில் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் ந.சிவசீலன் தெரிவித்தார்.
தகவல்- R .Anoraj[124]